இரும்பு பொருட்களை திருடி விற்ற மின்வாரிய பண்டகசாலை ஊழியர் கைது
சென்னிமலை:
சென்னிமலை யூனியன் ஈங்கூரில் மின்வாரிய அலுவலகம், துணை பண்டகசாலை உள்ளது.
இங்கு லட்சுமண சுந்தரம், செல்வம் ஆகியோர் மின் பாதை அலுவலர்களாகவும், துரைசாமி ஸ்டோர் பொறுப்பாளராகவும் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் 3 பேரும் கூட்டாக சேர்ந்து பண்டக சலையில் இருந்த ஆயிரத்து 361 கிலோ எடையுள்ள இரும்பு பொருட்களை திருடி பெருந்துறையில் உள்ள பழைய இரும்பு கடையில் விற்று பணம் பெற்றதாக கூறப்படுகிறது.
இந்த திருட்டு தொடர்பாக பெருந்துறை மின்வாரிய செயற்பொறியாளர் சின்னுசாமி சென்னிமலை போலீசில் புகார் செய்தார். போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் இரும்பு பொருட்களை திருடியதாக பண்டக சாலை ஊழியர் லட்சுமண சுந்தரத்தை சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் கைது செய்தார். கைதானவரிடமிருந்து திருடப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் லட்சுமண சுந்தரம் பெருந்துறை நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.
இரும்பு பொருட்களை திருடியதாக புகார் கூறப்படும் மற்ற 2 ஊழியர்க்ள தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.