செய்திகள்
கோப்புப்படம்

ஈரோடு மாவட்டத்தில் 23 ஆயிரத்து 645 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர்

Published On 2020-03-02 15:40 IST   |   Update On 2020-03-02 15:40:00 IST
ஈரோடு மாவட்டத்தில் 95 தேர்வு மையங்களில் 11,072 மாணவர்களும், 12,573 மாணவிகள் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 23 ஆயிரத்து 645 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 பொது தேர்வை எழுதினர்.

ஈரோடு:

தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபி, பவானி, பெருந்துறை, சத்தியமங்கலம் ஆகிய 5 கல்வி மாவட்டங்கள் அமைந்துள்ளது.

இதில் 95 தேர்வு மையங்களில் 11,072 மாணவர்களும், 12,573 மாணவிகள் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 23 ஆயிரத்து 645 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 பொது தேர்வை எழுதினர்.

காலையில் பள்ளிக்கு வரும் வழியில் கோவில்களில் மாணவ-மாணவிகள் பொது தேர்வை சிறப்பாக எழுத வேண்டி வழிபட்டனர். காலை 9 மணி முன்னதாக பள்ளி வளாகத்தில் மாணவர்கள் திரும்பவும் ஒருமுறை பாட புத்தகங்களை படித்துப் பார்த்தனர். தேர்வுகளை பயமின்றி எழுத ஆசிரியர்கள் மாணவர்களை ஆசீர்வதித்தனர்.

தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கியது. முதல் 15 நிமிடம் மாணவர்கள் தேர்வு தாள் வினாக்களை படிப்பதற்காக நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. பின்னர் 10.15 மணிக்கு மணி ஒலித்ததும் மாணவர்கள் தேர்வு எழுதத் தொடங்கினர். மதியம் 1.15 மணி வரை தேர்வு நடந்தது.

தனித்தேர்வர்கள் 622 பேருக்கு 7 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவும் வகையில் 38 சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வில் முறைகேடு நடப்பதை தடுக்க 1470 கண்காணிப்பாளர்களும், 260 பறக்கும் படையினரும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

தேர்வு அறையில் குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது. மேலும் 24 மணி நேரமும் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இன்று தொடங்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வு வரும் 24-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த பிளஸ்-2 பொதுத்தேர்வை மாவட்ட கலெக்டர் கதிரவன் பார்வையிட்டார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். 


Similar News