செய்திகள்
கைது

பந்தலூர் அருகே மனைவியை கத்தியால் குத்திய வாலிபர் கைது

Published On 2019-11-05 11:21 GMT   |   Update On 2019-11-05 11:21 GMT
பந்தலூர் அருகே குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஊட்டி:

பந்தலூர் அருகே சேரம்பாடி பஜார் அருகில் உள்ள சேரன் நகரை சேர்ந்தவர் மனோகரன்(வயது33). இவரது மனைவி உமா(30). கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் ஆத்திரமடைந்த உமா தனது கணவரை பிரிந்து சேரம்பாடி டான்டீ பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். கடந்த சில நாட்களுக்கு முன் உமா சேரன் நகர் பகுதியில் உள்ள மகளிர் குழுவுக்கு பணம் செலுத்துவதற்காக வந்தார்.

அப்போது மனைவி உமாவை பார்த்த மனோகரன் இனி நான் தகராறில் ஈடுபட மாட்டேன். நாம் ஒன்றாக சேர்ந்து வாழலாம் என்று கூறி வீட்டிற்கு அழைத்து சென்றார். இந்த நிலையில் சம்பவத்தன்று மீண்டும் கணவன், மனைவிக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த மனோகரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் உமாவை குத்தினார். இதில் அவருக்கு தலை உள்பட பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து மனோகரன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து உமாவை மீட்டு சிகிச்சைக்காக பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக மேப்பாடி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சேரம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை கத்தியால் குத்திய மனோகரனை கைது செய்தனர்.
Tags:    

Similar News