ஈரோட்டில் அரசு மாணவர்கள் விடுதிக்குள் புகுந்து தகராறு- 2 வாலிபர்கள் கைது
ஈரோடு:
ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் அருகில் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி உள்ளது. இந்த விடுதியின் காப்பாளராக வெங்கடாச்சலம்(வயது40) உள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தன்று இரவு மாணவர்கள் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது, ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு அண்ணாநகரை சேர்ந்த முகமது தவுபிக்(24), அசோகபுரி ஓடைபள்ளம் பெரியார்நகரை சேர்ந்த வசந்தகுமார்(21) ஆகிய 2பேர் விடுதிக்குள் அத்துமீறி உள்ளே நுழைந்து, மாணவர்களின் சாப்பாட்டினை பிடிங்கி தகராறு செய்தனர்.
இதைப்பார்த்த வெங்கடாச்சலம் அந்த வாலிபர்களை தட்டிகேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த முகமது தவுபிக், வசந்தகுமார் இருவரும் காப்பாளரை தகாத வார்த்தையால் பேசி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசில் வெங்கடாச்சலம் அளித்த புகாரின் பேரில், முகமது தவுபிக், வசந்தகுமார் ஆகிய இருவரையும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது விசாரித்து வருகின்றனர்.