செய்திகள்
நகை பறிப்பு

மோட்டார் சைக்கிளில் சென்ற சென்னை பேராசிரியர் மனைவியிடம் நகை பறிப்பு

Published On 2019-10-29 09:46 IST   |   Update On 2019-10-29 09:46:00 IST
மோட்டார் சைக்கிளில் சென்ற சென்னை பேராசிரியர் மனைவியிடம் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியை சேர்ந்தவர் வடிவேல் . சென்னையில் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுகந்தி.

கணவன் -மனைவி இருவரும் தீபாவளிக்காக சொந்த ஊரான சென்னிமலைக்கு வந்திருந்தனர் .

சொந்த வேலையாக சென்னிமலையில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஈரோட்டுக்கு வந்து கொண்டிருந்ததனர். வண்டியை வடிவேல் ஒட்ட பின்னால் சுகந்தி உட்கார்ந்து வந்தார்.

சென்னிமலை ரோடு, முத்தம் பாளையம் அருகில் சென்ற போது அவர்கள் பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த இரண்டு மர்ம நபர்கள் வடிவேல் வந்த மோட்டார் சைக்கிளில் மோதுவது போல் வந்தனர்.

இதனால் நிலை தடுமாறிய போது இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள் பின்னால் அமர்ந்து இருந்த சுகந்தியின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க செயினை பறித்து மின்னல் வேகத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றனர்.

இதனால் சுகந்தியின் கழுத்தில் காயம் ஏற்பட்டது இச்சம்பவம் அறிந்து அப்பகுதி மக்கள் திரண்டு கொள்ளையர்களை பிடிக்க முயன்றபோது மர்ம நபர்கள் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

இதனையடுத்து தாலுகா போலீசில் வடிவேலும் சுகந்தியும் புகார் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது .

ஈரோடு மாவட்டத்தில் ஹெல்மெட் கொள்ளையர்கள் தொடர்ச்சியாக கைவரிசை காட்டி வருவதால் மக்கள் குறிப்பாக பெண்கள் அச்சத்தில் உள்ளனர்

Similar News