செய்திகள்
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
கூடலூர் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே ஓவேலி முல்லை நகரை சேர்ந்தவர் விஜய்ரத்தினம்(வயது 22). இவர் கடந்த 2017-ம் ஆண்டு அந்த பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியிடம் நைசாக பேசி காட்டு பகுதிக்குள் அழைத்து சென்றார். பின்னர் அங்கு வைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கூடலூர் நியூஹோப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய் ரத்தினத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இது தொடர்பாக ஊட்டி மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி முரளிதரன் குற்றம் சாட்டப்பட்ட விஜயரத்தினத்துக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.4 லட்சம் நிவாரணத் தொகையை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மாலினி பிரபாகார் ஆஜரானார்.