செய்திகள்
தற்கொலை

மஞ்சூர் அருகே அணையில் குதித்து விவசாயி தற்கொலை

Published On 2019-10-13 16:31 GMT   |   Update On 2019-10-13 16:31 GMT
மஞ்சூர் அருகே மனைவி பிரிந்து சென்ற வேதனையில் அணையில் குதித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள இத்தலார் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது56). விவசாயி. இவருடைய மனைவி புனிதா. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர்கள் 2 பேரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் முருகனுக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 2 பேரும் பிரிந்தனர். இதையடுத்து முருகன் தனது தாயுடன் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாகவே முருகன் மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று தனது தாயிடம் வெளியில் சென்று வருவதாக கூறி சென்ற முருகன் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தாய் அக்கம்பக்கம் உள்ள உறவினர் வீடுகளில் தேடி பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவரது உறவினர்கள் எமரால்டு போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான முருகனை தேடி வந்தனர்.

இந்த நிலையில் மஞ்சூர் அருகே உள்ள போர்த்தி அணையில் ஆண் ஒருவர் பிணமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணமாக கிடந்தவரை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் அணையில் பிணமாக மிதந்தவர் காணாமல் போன முருகன் என்பதும், அவர் அணையில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்தரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News