செய்திகள்
பழந்தமிழர்கள் தங்கிய கல்திட்டை கண்டுபிடிப்பு

கீழடியில் பழந்தமிழர்கள் தங்கிய கல்திட்டை கண்டுபிடிப்பு

Published On 2019-10-11 05:35 GMT   |   Update On 2019-10-11 05:35 GMT
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் பழந்தமிழர்கள் தங்கிய கல்திட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் தொல்லியல் துறையினர் 5 கட்ட அகழாய்வு பணிகளை நடத்தி முடித்துள்ளனர்.

இந்த ஆய்வில் 2600 ஆண்டுகள் பழமை வாய்ந்த செப்பு, இரும்பு பொருட்கள், சுடுமண் சிற்பம், அணிகலன் உள்ளிட்ட 1000-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

மேலும் பழந்தமிழர்களின் வாழ்வியலை அறியும் வகையில் கால்வாய், இரட்டை சுவர், உறை கிணறு போன்றவை கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை நடத்தப்பட்ட அகழாய்வின் மூலம் அரிய தகவல்கள் கிடைத்துள்ளன.

எனவே 6-ம் கட்ட அகழாய்வு பணி விரிவாக நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில் நேற்று அகழாய்வு நடந்து முடிந்த சில மீட்டர் தூரத்தில் தென்னை மரக்கன்றுகளை நடவு செய்வதற்காக பள்ளம் தோண்டப்பட்டது.

அப்போது அங்கு மனிதர்கள் பதுங்கும் வகையில் கல்திட்டை அமைக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. ஆதிமனிதர்கள் மழை, வெயில் காலங்களில் இருந்து தங்களை பாதுகாக்க பூமிக்கடியில் பாறைகளின் மறைவில் கல் திட்டை அமைத்து தங்கி இருந்திருந்தார்கள்.

அதன்படி கீழடியில் வாழ்ந்த ஆதிதமிழர்கள் இரவு மற்றும் மழை, வெயில் காலங்களில் தங்களை பாதுகாக்க இந்த கல்திட்டை அமைத்து இருக்கலாம் என கருதப்படுகிறது.

இதுதொடர்பாக நில உரிமையாளர் கதிரேசன் தொல்லியல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். கல் திட்டையை பார்வையிட்ட அதிகாரிகள் 6-ம் கட்ட அகழாய்வு தொடங்கும். இதுதொடர்பாக விரிவாக ஆய்வு நடத்தப்படும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News