வேலூர் சத்துவாச்சாரியில் வாலிபரிடம் செல்போன் பறிப்பு
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி சாலை கெங்கை அம்மன் கோவில் அருகே நேற்று இரவு செல்போனை கையில் வைத்தபடி வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் இரண்டு பேர் வந்தனர். அதில் பின்னால் இருந்தவர் சாலையோரம் நின்ற வாலிபரின் செல்போனை பறித்தார்.
அவர் சுதாரிப்பதற்குள் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றனர். இதனைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் திடுக்கிட்டு கூச்சலிட்டனர் . வாலிபர் அவரது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு பின்னால் விரட்டிச் சென்றார். சர்வீஸ் சாலையில் வேகமாக சென்ற வழிப்பறி திருடர்கள் காந்தி நகர் சப்வே வழியாக கோட்டின் அருகே சென்று மாயமாக மறைந்தனர்.
வேலூரில் சாலையோரம் நடந்து செல்பவர்களை குறிவைத்து செல்போன் மற்றும் செயின் பறிப்பில் கும்பல் ஈடுபட்டு வருகின்றனர்.
செல்போன் பறி கொடுப்பவர்கள் பலர் இதுபற்றி போலீசிலும் புகார் செய்வதில்லை. இதனால் கும்பல் தொடர்ந்து கைவரிசை காட்டி வருகின்றனர். சாலையோரம் நடந்து செல்லும்போது பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.