செய்திகள்
6 மாதமாக குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் மறியல்
ஜோலார்பேட்டையில் 6 மாதமாக குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அருகே உள்ள புல்லாநெறி வட்டம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு ஊராட்சி மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்த கிராமத்திற்கு கடந்த 6 மாதங்களாக சீரான குடிநீர் சப்ளை வழங்கவில்லை. கடந்த மாதம் முதல் குடிநீர் சப்ளை முழுவதும் நிறுத்தப்பட்டது. இதனால் கிராம மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
இதுபற்றி ஊராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் பஸ் நிறுத்தம் அருகே நாட்றம்பள்ளி திருப்பத்தூர் மெயின் ரோட்டில் சாலை மறியல் செய்தனர். அப்போது திருப்பத்தூர் நோக்கி வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டம் செய்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது
30 நிமிடத்திற்கு மேலாக பொது மக்கள் போராட்டம் நீடித்தது. சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் அதிகாரிகள் யாரும் வரவில்லை. உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தொடர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறிய பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.