செய்திகள்
குடியாத்தம் அருகே ரெயில்வே பாலத்தில் வடமாநில வாலிபர் பிணம்
குடியாத்தம் அருகே ரெயில்வே பாலத்தில் வடமாநில வாலிபர் பிணமாக கிடந்தார். ரெயிலில் இருந்து தள்ளி கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குடியாத்தம்:
அசாம் மாநிலம் பார் பேட்டா மாவட்டத்தை சேர்ந்த அப்துல் மகன் அஜில் (வயது 21). இவர் நேற்று சென்னையில் இருந்து நண்பர்களுடன் பெங்களூருக்கு வேலைக்காக பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்று கொண்டிருந்தார்.
ரெயில் குடியாத்தத்தை கடந்தபோது அஜில் மாயமானார். இதுபற்றி அவரது நண்பர்கள் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று காலை குடியாத்தம் அடுத்த இந்திரா நகர் ரெயில்வே மேம்பாலம் அருகே அஜில் உடல் முழுவதும் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
ஜோலார்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி அஜில் ரெயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.