வேலூரில் லாட்ஜில் விபசாரம்- 4 பேர் கைது
வேலூர்:
வேலூரில் உள்ள தங்கும் விடுதிகளில் விபசாரம் நடந்து வருவதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புகார் வந்தது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் அனைத்து தங்கும் விடுதிகளையும் சோதனை செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் இளவரசி மற்றும் போலீசார் நேற்று தங்கும் விடுதிகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
அப்போது கிரீன் சர்க்கிள் பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் 3 அறைகளில் 3 பெண்கள், 3 ஆண்கள் விபசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் ஆரணியை சேர்ந்த மோகன் (வயது40), போளூரை சேர்ந்த ஏழுமலை (35), விருதம்பட்டை சேர்ந்த விஜய் (25) என்பதும், விபசாரத்திற்கு தங்கும் விடுதி மேலாளர் ஊசூரை சேர்ந்த பிச்சாண்டி (36) உறுதுணையாக இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் விடுதி மேலாளர் உள்பட 4 பேரையும் கைது செய்தனர். விபசாரத்தில் ஈடுபட்ட 3 பெண்களும் வேலூரில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.