பண்ணாரி கோவில் அருகே புலியை நேரில் பார்த்த வியாபாரி அதிர்ச்சி
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் வனப் பகுதியில் தற்போது புலிகளின் எண்ணிக்கை கூடி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே அந்த வழியாக செல்பவர்களும் ரோந்து பணியில் ஈடுபடும் வனத்துறையினரும் அவ்வப்போது புலியை நேரில் பார்த்தும் உள்ளனர்.
சத்தியமங்கலத்தை சேர்ந்த வியாபாரி ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் தாளவாடி போய் விட்டு மீண்டும் சத்தியமங்கலத்துக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
வனப்பகுதியையொட்டி உள்ள பண்ணாரி கோவில் அருகே எக்காலஜி பார்ம் என்ற வனக்குட்டை அருகே மதியம் 2 மணியளவில் அவர் வந்தபோது வனக் குட்டையிலிருந்து திடீரென மஞ்சள் நிறத்தில் ஏதோ ஒன்று தென்பட அந்த வியாபாரி திரும்பி பார்த்தார். அடுத்தகணம் ஆடிப்போனார். வனக்குட்டை அருகே பெரியபுலிஒன்று ஜம்மென்று நின்று கொண்டிருந்தது. தனது பைக்கை நிறுத்தி அந்த புலியை பார்த்தார். சிறிது நேரம் உட்கார்ந்திருந்த அந்த புலி பிறகு காட்டுக்குள் புகுந்தது.
இதுகுறித்து அவர் மற்றவர்களுக்கு கூற பண்ணாரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவில் அருகே புலி நடமாட்டம் என தகவல் கேட்டதும் பக்தர்களும் சிலிர்த்தனர்.
இதுகுறித்து சத்தியமங்கலம் வனச்சரகர் பெர்னார்டு கூறும்போது, “பண்ணாரி பகுதியில் புலி நடமாட்டம் உள்ளதை பார்த்து உள்ளனர். எனவே பக்தர்கள் பொதுமக்கள் என யாரும் வனப்பகுதி உள்ளே சென்றுவிட வேண்டாம், ஆடு-மாடு மேய்ப்பவர்களும் கவனமாக இருக்க வேண்டும்“ என்று கூறி உள்ளார்.