செய்திகள்
உணவு

எக்ஸ்பிரஸ் ரெயில்களில் உணவு கிடைக்காமல் பயணிகள் அவதி

Published On 2019-09-07 10:00 GMT   |   Update On 2019-09-07 10:00 GMT
மதுரை ரெயில்வே கோட்டத்தில் இருந்து செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் விரும்பிய உணவு கிடைக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென் மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மானாமதுரை:

மதுரை ரெயில்வே கோட்டத்தில் இருந்து சென்னை மற்றும் வட மாநிலங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் கேரளா வரையும் தினமும் ரெயில்கள் சென்று திரும்புகின்றன. இதில் மிக முக்கிய புண்ணியஸ்தலமாக கருதப்படும் ராமேசுவரம் ரெயில் நிலையம், பெருந்தலைவர் காமராஜரின் முயற்சியால் கொண்டு வந்த விருதுநகர்-மானாமதுரை ரெயில்பாதை என அனைத்தும் மதுரை ரெயில்வே கோட்ட நிர்வாகத்தின் கீழ் உள்ளது. தற்போது காரைக்குடி-திருவாரூர் ரெயில் பாதையிலும் எவ்வித ரெயில்களும் விடப்படாமல் பணிகள் முடிந்தும் பயனின்றி உள்ளது.

தற்போது ராமேசுவரத்தில் இருந்து சென்னை செல்ல மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி செல்ல நள்ளிரவு ஆகி விடுகிறது. இதில் வரும் பயணிகளுக்கு உணவு கிடைக்க கேட்டரிங் வசதி இல்லாததால் உணவு கிடைக்காமல் பயணிகள் அவதிப்படுகின்றனர்.

இதேபால் செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு மதுரை வழியாகவும், மானாமதுரை வழியாகவும் ரெயில்கள் இயக்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு மேல் செங்கோட்டையில் இருந்து புறப்படும் ரெயில்களில் கேட்டரிங் இல்லாததால் முதியோர்கள், நோயாளிகள் இரவு உணவு கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

ரெயில் நிலைய பிளாட்பார கடைகளில் சென்று வாங்க வேண்டுமானால் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 2 நிமிடம் அல்லது 5 நிமிடம் மட்டும் நிற்கிறது. உணவு வாங்க இறங்கிய பலர் ரெயில்களில் மீண்டும் ஏற முடியாமல் நடுவழியில் பயணத்தை தொடர முடியாமல் அவதிப்படுகின்றனர்.

எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கேட்டரிங் விரும்பிய உணவு ஆர்டர் எடுப்பவர்கள் விருதுநகர், மதுரை, மானாமதுரை ரெயில் நிலையங்களில் ரெயிலில் சப்ளை செய்ய முடியும். தற்போது அந்த வசதி இல்லாததால் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணிக்கும் பயணிகள் இரவு உணவு கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். ரெயில்களில் விரும்பிய உணவு கிடைக்க மதுரை ரெயில்வே கோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென் மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News