செய்திகள்
கலெக்டர் கதிரவன் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் நிவாரண நிதிக்கான காசோலையினை வழங்கினார்.

மின்சாரம் தாக்கி பலியான பெண்ணின் கணவருக்கு நிதி உதவி - கலெக்டர் வழங்கினார்

Published On 2019-07-23 16:41 IST   |   Update On 2019-07-23 16:41:00 IST
முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்த பெண்ணின் கணவருக்கு ரூ.1,00,000-க்கான காசோலையினை கலெக்டர் கதிரவன் வழங்கினார்.
ஈரோடு:

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டு பரிசீலித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார்.

கூட்டத்தில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்த கோபி வட்டத்தைச் சார்ந்த மோகனாம்பாள் என்பரின் கணவர் வெங்கடேசனுக்கு ரூ.1,00,000-க்கான காசோலையினையும், நீரில் மூழ்கி உயிரிழந்த பெருந்துறை வட்டத்தைச் சார்ந்த செல்வன் லிங்கேஸ்வரன் என்பவரின் தந்தை முருகன் என்பருக்கு ரூ.1,00,000 -க்கான காசோலையினை கலெக்டர் வழங்கினார்.

வருவாய் துறையின் சார்பில் கோபி வட்டத்தைச் சேர்ந்த சரஸ்வதி என்பவருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாவினையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, உதவி கலெக்டர் (பயிற்சி) நிசாந்த் கிருஷ்ணா உள்பட அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News