கணவருடன் தகராறு: 2 வயது மகனுடன் இளம்பெண் மாயம்
பெருந்துறை:
பெருந்துறை அருகே உள்ள வேப்பம்பாளையம் புத்தூர் புதுப்பாளையம் வேலவன் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி பெயர் ரூபியா (வயது 20). 2 வயதில் ஒரு மகன் உள்ளான். ரூபியாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. வீட்டு வேலை ஏன் ஒழுங்காக பார்க்க மாட்டேன்கிறாய்? என்று கூறி ராஜ்குமார் மனைவியை சத்தம் போட்டு கண்டித்தாராம்.
மேலும் சம்பவத்தன்று இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மனைவியை அடித்ததாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் ராஜ்குமார் வேலைக்கு போய்விட்டார். மதியம் வீட்டுக்கு வந்த போது வீட்டில் மனைவியையும், குழந்தையையும் காணவில்லை.
கணவர் சத்தம் போட்டு தன்னை அடித்ததால் கோபித்து கொண்டு ரூபியா தனது மகனுடன் மாயமாகி விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது கணவர் ராஜ்குமார் பெருந்துறை போலீசில் புகார் செய்தார்.