செய்திகள்
விபத்து

ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் லாரி மோதி மில் தொழிலாளி பலி

Published On 2019-07-02 15:25 GMT   |   Update On 2019-07-02 15:25 GMT
ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் இன்று இரு சக்கர வாகனத்தின் மீது லாரி விபத்தில் மில் தொழிலாளி பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

சென்னிமலை அருகே உள்ள கே.ஜி. வலசு பகுதியை சேர்ந்தவர் நாச்சிமுத்து (வயது 38). இவர் ஈரோடு அடுத்த ஆலுச்சாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு ரைஸ் மில்லில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

இவர் இன்று காலை இரண்டு சக்கர வாகனத்தில் ஈரோட்டுக்கு வந்தார். அவர் வீரப்பன்சத்திரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஜல்லி கற்கள் ஏற்றி வந்த ஒரு மினி லாரி நாச்சிமுத்து வந்த இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் தலையில் பலத்த அடிப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து மினி லாரியை ஓட்டி வந்த லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். இதனால் வீரப்பன் சத்திரம் பகுதியில் பொது மக்கள் கூடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். விபத்தையொட்டி அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போக்குவரத்தை சரி செய்தனர்.

தொடர்ந்து போலீசார் அவரது உடலை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News