செய்திகள்

தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்தது சிறுத்தை- மக்கள் பீதி

Published On 2019-06-27 22:26 IST   |   Update On 2019-06-27 22:26:00 IST
தாளவாடி அருகே இன்று அதிகாலை ஒரு சிறுத்தை ஊருக்குள் புகுந்ததால் மக்கள் பீதி அடைந்தனர். வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
தாளவாடி:

ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் வனப்பகுதியில் ஏராளமான சிறுத்தைகள் வாழ்ந்து வருகிறது. முன்பெல்லாம் சிறுத்தை மற்றும் புலியை பார்ப்பது மிகவும் அரிதாக இருந்தது. தற்போது இவை வெளியே ரோட்டோரம் நடமாடுவது அதிகமாகி விட்டது. நேற்று அதிகாலை சத்தி- திம்பம் மலைப்பாதை 25- வது துறையில் ரோட்டோரம் உள்ள தடுப்புச் சுவரில் ஒரு சிறுத்தை படுத்து கிடந்தது. அந்த வழியாக வாகனத்தில் சென்றவர்கள் இதை தங்கள் செல்போனில் படம் பிடித்தனர். 

இந்த நிலையில் இன்று அதிகாலை தாளவாடி அருகே ஒரு சிறுத்தை ஊருக்குள் புகுந்து உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சத்தி வனப்பகுதி தாளவாடி அருகே அண்ணா நகரில் மாதவிநாயக்கா என்பவரின் வீடு உள்ளது. அருகே இவரது விவசாய தோட்டமும் உள்ளது. 

இன்று அதிகாலை விவசாயி மாதவிநாயக்கா தோட்டத்துக்கு சென்ற போது அங்கு ஒரு சிறுத்தை நடந்து சென்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே பயந்து போய் வீட்டுக்குள் சென்று விட்டார். நன்றாக விடிந்ததும் ஊரில் அவர் தெரிவிக்க ஊர் மக்கள் பீதி அடைந்தனர். 

மேலும் தாளவாடி வனத்துறையினருக்கும் தெரிவிக்கப்பட்டது. வனதுறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். இது குறித்து வன ஊழியர்கள் பொதுமக்களிடம் கவனமாக எச்சரிக்கையாக இருங்கள் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Similar News