சீர்காழி அருகே மின்நிலைய டிரான்ஸ்பார்மர் வெடித்தது- 60 கிராமங்களில் மின்தடை
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி அருகே மணமேல்குடி அடுத்த கடலங்குடி பகுதியில் மின்நிலையம் உள்ளது. இங்கிருந்து தான் சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில் துணை மின்நிலையங்களுக்கு மின்சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடலங் குடி மின்நிலையத்தில் நேற்று இரவு 7 மணியளவில் திடீரென டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியது. இதனால் சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மணல்மேடு, பட்டவர்த்தி, திருமுல்லை வாசல், கொள் ளிடம், பழையாறு ஆகிய இடங்களில் உள்ள 60 கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது.
பிறகு மின்நிலைய அதிகாரிகள் விரைந்து வந்து சீரமைத்தனர். பின்னர் இரவு 10 மணியளவில் மீண்டும் மின்சாரம் வந்தது. இதனால் சுமார் 3 மணி நேரம் மின்தடையால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
இதற்கிடையே மின் ஊழியர்கள் தற்காலிகமாக சீரமைத்ததால் மீண்டும் இரவு 11.30 மணியளவில் மின்தடை ஏற்பட்டது. பிறகு சுமார் 1½ மணி நேரம் கழித்து நள்ளிரவு 1 மணிக்கு மின்சாரம் வந்தது.
இதனால் சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், மற்றும் சுற்றியுள்ள 60 கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது. இதேபோல் இன்று காலை 10 வரையிலும் மின்சாரம் வருவதும், அதன் பிறகு போவதுமாக இருந்தது.
இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி வியாபாரிகளும் சிரமப்பட்டனர். மின்நிலையத்தில் டிரான்ஸ்பார்மர் வெடித்து பழுதானதை அதிகாரிகள் பார்வையிட்டு சீரமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.