செய்திகள்

சூதாட்ட கிளப்பில் சிக்கிய போலீஸ்காரர் சஸ்பெண்டு

Published On 2019-06-24 11:58 GMT   |   Update On 2019-06-24 11:58 GMT
ஈரோடு அருகே சூதாட்ட கிளப்பில் சிக்கிய போலீஸ்காரரை சஸ்பெண்டு செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு:

ஈரோடு அருகே ஆனைக்கல் பாளையம் பகுதியில் உள்ள ஒரு கிளப்பில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர்கள் ஈரோடு பிரியா தோட்டம் பகுதியை சேர்ந்த குமார், செங்கோடம் பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரதீப், பழைய பாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ், கள்ளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த வெள்ளையங்கிரி என தெரிய வந்தது.

இதில் வெள்ளிங்கிரி என்பவர் ஈரோடு ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 2 லட்சத்து 25 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆயுதப்படை போலீஸ் வெள்ளிங்கிரியை சஸ்பெண்டு செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News