செய்திகள்

பெருந்துறை அருகே சினிமா பாணியில் பெண்ணை காரில் கடத்தி சென்ற கும்பல்

Published On 2019-06-21 17:27 GMT   |   Update On 2019-06-21 17:27 GMT
பெருந்துறை அருகே காதல் திருமணம் செய்த பெண்ணை காரில் கடத்தி சென்ற கும்பலை பொதுமக்கள் மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்று மீட்டனர்.

பெருந்துறை:

பெருந்துறை அடுத்த திருவேங்கிடம் பாளையம், ராஜாஜிவீதி பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ். இவரது மனைவி ஆர்த்தி (வயது20).

கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் கரூரில் காதல் திருமணம் செய்து கொண்ட இவர்கள் தற்போது இங்கு வசித்து வருகின்றனர். ஆகாஷ் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திலும், ஆர்த்தி அதே பகுதியில் உள்ள ஒரு கேபிள் டிவி ஆபிசிலும் பணிபுரிந்து வருகின்றனர்.

நேற்று மதியம் ஆர்த்தி ஆபிசில் இருந்து வீட்டிற்கு சாப்பிடுவதற்காக நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக அவருக்கு பின்னால் வந்த கார் ஒன்று இவருக்கு அருகில் வந்து நின்றது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் திரும்பி பார்ப்பதற்குள் காரில் இருந்து இறங்கிய 4 பேர் ஆர்த்தி வாயை பொத்தி காருக்குள் தள்ளி ஏற்றி கடத்தி சென்றனர்.

இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் இரு சக்கர வாகனங்களில் காரை துரத்தி சென்றனர். இதனைக் கண்ட காரில் வந்த நபர்கள் காரை வேகமாக ஓட்டிச் சென்று பைபாஸ் ரோட்டில் மின்னல் வேகத்தில் சென்றனர்.

ஆனால் பைக்கில் சென்றவர்கள் விடாமல் துரத்தினர். பெருந்துறை அடுத்த துடுப்பதி பிரிவு அருகே காரில் இருந்த ஆர்த்தியை கீழே தள்ளி விட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர். பின்னர் ஆர்த்தியை மீட்ட பொதுமக்கள் பெருந்துறை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

அங்கு அவரை விசாரித்த போது, காரில் தனது அத்தை சாந்தி என்பவருடன் அடையாளம் தெரியாத 4 நபர்கள் வந்து தன்னை தூக்கி கொண்டு சென்று கத்தியை காட்டி மிரட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டினர். ஆனால் பின்னால் துரத்தி வருபவர்களை கண்டதும் என்னை வழியிலேயே தள்ளி விட்டு சென்று விட்டனர் என்றார்.

இது தொடர்பாக பெருந்துறை இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்குபதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகிறார்.

பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளம்பெண் ஆர்த்தி காதல் திருமணம் செய்த விவகாரத்தால் அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News