ஈரோட்டில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்து வாலிபர் பலி
ஈரோடு:
ஈரோடு திண்டல் லட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஜீவா (வயது 17). ஈரோடு சாஸ்திரி நகரை சேர்ந்தவர் சண்முகம் (19). ஈரோடு வீரப்பம்பாளையம் ராஜா காம்பவுண்ட் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (21). மூன்று பேரும் நண்பர்கள். மூன்று பேரும் கல்லூரி படித்து வருகின்றனர். படித்துக் கொண்டே பகுதி நேரமாக சமையல் வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நிகழ்ச்சி நடந்தது. இதில் சமையல் வேலை செய்துவிட்டு ஜீவா சண்முகம் முத்துக்குமார் ஆகிய மூவரும் இன்று அதிகாலை 3 மணியளவில் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு இருந்த வேகத்தடையை கவனிக்காமல் கடக்க முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி மூவரும் கீழே விழுந்தனர்.
உயிருக்கு போராடிய மூவரையும் அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்த போது மாணவர் ஜீவா இறந்துவிட்டதாக தெரிவித்தார். சண்முகம் முத்துக்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.