ஆப்பக்கூடலில் மனைவி பிரிந்த வேதனையில் டெய்லர் தற்கொலை
ஆப்பக்கூடல்:
ஆப்பக்கூடல் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 34) டெய்லர். இவரது மனைவி பிரியா (33). இவர்களுக்கு யுகாஸ், சியாஸ் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. பிரியா கணவருடன் கோபித்துக்கொண்டு பட்டுக்கோட்டையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு தனது 2 மகன்களுடன் சென்று விட்டார்.
இந்நிலையில் நேற்று பட்டுக்கோட்டைக்கு சென்ற சக்திவேல் மனைவியுடன் சமாதானம் பேசி வீட்டுக்கு வருமாறு அழைத்தார். ஆனால் மனைவி வரவில்லை. இதனால் மன வேதனையில் அவர் இருந்தார். இன்று காலை டெய்லர் கடைக்கு வந்த சக்திவேல் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சக்திவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.