கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு கார் மரத்தில் மோதி கவிழ்ந்தது- மனைவியுடன் உயிர் தப்பினார்
நம்பியூர்:
ஈரோடு மாவட்டம் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டாக இருப்பவர் கிருஷ்ணசாமி (வயது57). உடல் நலம் சரி இல்லாததால் மூன்று நாட்கள் விடுமுறை எடுத்து இருந்தார்.
இனதயொட்டி உடல்நிலையை பரிசோதிக்க அவர் தனது மனைவி மல்லிகாவுடன் காரில் கோவையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
காரை அவரே ஓட்டிச் சென்றார். அருகில் அவரது மனைவி அமர்ந்து சென்றார் கோவை சென்றுவிட்டு மீண்டும் திரும்பி கோபிக்கு வந்து கொண்டிருந்தார்.
நம்பியூர் அருகே பூச்ச நாயக்கன் பாளையம் பகுதியில் ஒரு வளைவில் கார் வந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் உள்ள ஒரு புளிய மரத்தில் மோதி ரோட்டோரம் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் துணை போலீஸ் சூப்பிரண்டும் அவரது மனைவியும் கார் இடிபாடுகளில் சிக்கி தவித்தனர். மனைவி மல்லிகாவுக்கு இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. டிஎஸ்பியும் காயத்துடன் தப்பினார்.
பிறகு இருவரும் மீட்கப்பட்டு கோபியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இது குறித்து நம்பியூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.