செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு - விவசாயிகள் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டம்

Published On 2019-05-22 17:54 GMT   |   Update On 2019-05-22 17:54 GMT
ஜெயங்கொண்டம் அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஜெயங்கொண்டம்:

தமிழகத்தில் நாகை, திருவாரூர், கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் ஆகியவற்றை எடுக்க மத்திய அரசு வேதாந்தா குழுமத்திற்கு அனுமதி அளித்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தினால் டெல்டா பகுதிகள் அனைத்தும் அழிந்து நிலத்தடி நீர்மட்டம் இறங்கி பாலைவனமாகிவிடும் நிலை உள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் ஆகிய திட்டங்களை ரத்து செய்ய அனைத்து பகுதிகளிலும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று ஜெயங்கொண்டம் அருகே உள்ள புதுக்குடி தெற்கு கரைமேடு பகுதியில் விவசாயிகள், மக்கள் சேவை இயக்க விவசாய பிரிவு மாநிலத்தலைவர் தங்கசண்முகசுந்தரம் தலைமையில், விவசாயிகள் உளுந்து வயலில் இறங்கி ஹைட்ரோ கார்பன், மீத்தேன் ஆகிய திட்டங்களை செயல்படுத்த தமிழகம் முழுவதும் கைவிட வேண்டும். விவசாயம் மற்றும் விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின்போது விவசாயிகள், பெண் தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் முதல் கிழக்கு கடற்கரை சாலை வழியாக ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் வரை மனிதசங்கிலி போராட்டம் நடத்துவது என விவசாயிகள் முடிவு செய்தனர். 
Tags:    

Similar News