செய்திகள்

கோஷ்டி மோதலில் விவசாயி மீது துப்பாக்கிச்சூடு - 6 பேர் கைது

Published On 2019-04-03 19:10 IST   |   Update On 2019-04-03 19:10:00 IST
ஒடுகத்தூர் அருகே கோஷ்டி மோதலில் விவசாயி மீது துப்பாக்கியால் சுட்டது குறித்து 6 பேரை கைது செய்த போலீசார் மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
அணைக்கட்டு:

ஒடுகத்தூரை அடுத்த பெரிய எட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி வள்ளியம்மாள் (வயது 60). இவர்களுக்கு சொந்தமாக வீடு ஒன்று உள்ளது.

அதே பகுதியில் விவசாயி செந்தில் என்பவருக்கும் கிணறு உள்ளது. செந்திலின் கிணற்றில் தற்போது தண்ணீர் இல்லை. இதனால் அவர் கிணற்றை ஆழப்படுத்த பாறைகளை உடைப்பதற்காக கடந்த 30-ந்தேதி எந்திர உதவியுடன் வெடிவைத்துள்ளார்.

அப்போது அந்த வெடி, வெடித்ததில் கிணற்றுக்குள் இருந்த பாறைகள் சிதறின. இதில் வள்ளியம்மாள் வீட்டின் கூரை மீது ஒரு கல் விழுந்ததில் வீடு சேதம் அடைந்தது. இதனால் செந்தில் தரப்பினரை வள்ளியம்மாள் தட்டிக்கேட்டார். அப்போது ஏற்பட்ட பிரச்சினையில் செந்தில் மற்றும் அவரது தரப்பினர் வள்ளியம்மாளை தாக்கினர்.

தனது தாயார் தாக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த வள்ளியம்மாளின் மகன் கோவிந்தன், அது குறித்து செந்தில் தரப்பினரிடம் கேட்டபோது அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.

அப்போது கோவிந்தன் மறைத்து வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை எடுத்து தனது ஆதரவாளர் சாமிநாதனிடம் கொடுத்து செந்திலை சுடுமாறு கூறிதாக தெரிகிறது. செந்திலை சுட்டதில் அவருக்கு காலில் படுகாயம் ஏற்பட்டது. காயமடைந்த செந்திலை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து இருதரப்பினரும் வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். வள்ளியம்மாள் அளித்த புகாரின்பேரில் செந்தில் (28), வெங்கடேசன் (24), சத்தியராஜ் (22) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோல் செந்தில் கொடுத்த புகாரின்பேரில் அண்ணாமலை (59), ஜெயராமன் (30), கோவிந்தன் (19) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் இருதரப்பிலும் தலைமறைவான சுப்பிரமணி, அண்ணாமலை, சாமிநாதன் ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். #tamilnews

Similar News