செய்திகள்

காஞ்சிகோவில் பகுதியில் வேனில் எடுத்து சென்ற ரூ.1.35 லட்சம் பறிமுதல்

Published On 2019-04-01 15:51 IST   |   Update On 2019-04-01 15:51:00 IST
காஞ்சிகோவில் பகுதியில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் வேனில் எடுத்து சென்ற ரூ.1.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019

பெருந்துறை:

பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிக்கோவில் கொண்டடையன்காட்டு வலசு பகுதியில் பெருந்துறை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மோகன சுந்தரம், எஸ்ஐ ஜீவா ஆகியோர் கொண்ட குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு மாருதி வேனை நிறுத்தி சோதனை மேற் கொண்டபோது அந்த வேனை ஓட்டி வந்த கவுந்தப்பாடிபுதூர்,மெயின் ரோடு பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி என்பவரது மகன் ரவியிடம் (48) இருந்த முறையான ஆவணங்கள் இல்லாத ரூபாய் 1 லட்சத்து 35 ஆயிரத்து 380ஐ பறிமுதல் செய்தனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் கவுந்தப்பாடி வேன் உரிமையாளர்கள் சங்கத்தில் பொருளாளராக உள்ளதும், நேற்று புதுக் கணக்கு பூஜை போட்டு விட்டு அலுவலகத்தில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு ஈரோட்டில் மருத்துவமனையில் உள்ள உறவினர் ஒருவரை பார்க்க செல்வதற்காக வந்ததும் தெரிய வந்தது.

ஆனால் அவர் வைத்திருந்த பணத்திற்கு முறையான ஆவணங்கள் ஏதும் இல்லாததால் அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் பெருந்துறை தாசில்தார் துரைசாமியிடம் ஒப்படைத்தனர். #LokSabhaElections2019

Similar News