செய்திகள்
கீழ்பென்னாத்தூர் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்
கீழ்பென்னாத்தூர் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் இன்று சாலை மறியல் செய்தனர்.
கீழ்பென்னாத்தூர்:
கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள கொளத்தூரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கடந்த 3 மாதங்களாக குடிநீர் முறையாக வழங்கவில்லை. இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் 150-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் கீழ்பென்னாத்தூர் சானிப்பூண்டி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த கீழ்பென்னாத்தூர் போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்திற்கு வந்து பெண்களிடம் பேச்சுவார்தை நடத்தினர். அப்போது சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இதையடுத்து பெண்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.