செய்திகள்

திருப்பத்தூர் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

Published On 2019-01-28 15:55 IST   |   Update On 2019-01-28 15:55:00 IST
திருப்பத்தூர் அருகே குடிநீர் கேட்டு 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் செய்தனர்.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அடுத்த கூடபட்டு காலனியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த பல மாதங்களாக இந்த பகுதிக்கு குடிநீர் வினியோகம் முறையாக வழங்கப்படவில்லை.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் இன்று காலை திருப்பத்தூர் ஆலங்காயம் செல்லும் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இதையடுத்து மறியலை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News