செய்திகள்

திருத்தணி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் மறியல்

Published On 2019-01-08 06:37 GMT   |   Update On 2019-01-08 06:37 GMT
திருத்தணி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பள்ளிப்பட்டு:

திருத்தணி அருகே உள்ள தாடூர் காலனியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

அவர்களுக்கு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனை கண்டித்தும், குடிநீர் வழங்கக் கோரியும் அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் இன்று காலை இ.என். கண்டிகையில் திருத்தணி- சித்தூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு ஆகியோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். கிராம மக்களின் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News