செய்திகள்
புதுவையில் இருந்து கடலூருக்கு காரில் மதுபாட்டில்கள் கடத்திய 2 மாணவர்கள் கைது
கடலூரில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுவையில் இருந்து காரில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 2 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்:
கடலூர் மது விலக்கு போலீசார் இன்று அதிகாலை ஆல்பேட்டை சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கார் ஒன்று வேகமாக வந்தது. போலீசார் அந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர்.
காருக்குள் அட்டைப் பெட்டிகள் இருந்தன. சந்தேகம் அடைந்த போலீசார் அதனை பிரித்து பார்த்தனர். உள்ளே மதுப்பாட்டில்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை தொடர்ந்து போலீசார் காரில் இருந்த 2 வாலிபர்களையும் பிடித்து மதுவிலக்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து நடத்திய விசாரணையில் அவர்கள் சிதம்பரம் பல்கலைக்கழகத்தில் படித்து வருவதும், வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதையொட்டி அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து மது பாட்டில்களையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.