செய்திகள்

கூடங்குளம் அருகே கடலில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

Published On 2018-11-07 05:10 GMT   |   Update On 2018-11-07 05:10 GMT
கூடங்குளம் அருகே கடலில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியான சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை:

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள பெருமணல் கிராமத்தைச் சேர்ந்தவர் கென்னடி. இவரது மகன் ரிஷோர் (வயது 10). அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரது மகன் சந்திராயப்பன் (10). இந்த 2 சிறுவர்களும் நண்பர்கள் ஒன்றாக 5-ம் வகுப்பு படித்து வந்தனர். இவர்கள் அடிக்கடி ஒன்றாக சென்று விளையாடுவர்கள்.

நேற்று பகல் 11.30 மணி அளவில் ரிஷோரும், சந்திராயப்பனும் பெருமணல் கடல் பகுதிக்கு குளிக்க சென்றனர். அவர்கள் அந்த பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மகன்கள் என்பதாலும் இரண்டு பேருக்கும் நீச்சல் தெரியும் என்பதாலும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிறுவர்கள் கடற்கரையில் விளையாடுவதை தடுக்கவில்லை.

2 சிறுவர்களும் கடற்கரை ஓரத்தில் அலை அடிக்கும் பகுதியில் குளித்து விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது திடீர் என்று ஒரு ராட்சத அலை அடித்தது. இதில் கரையோரம் குளித்துக்கொண்டு இருந்த 2 சிறுவர்களையும் அலை கடலுக்குள் இழுத்துச் சென்றது. அவர்கள் கத்தி அபாயகுரல் எழுப்பினார்கள். அப்போது அருகில் யாரும் இல்லாததால் அவர்களை காப்பாற்ற முடியவில்லை. அலை சுருட்டி இழுத்துச்சென்றதால் 2 சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே நீரில் மூழ்கி பலியானார்கள்.

அப்போது சத்தம் கேட்டு அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்கு ஓடி வந்து பார்த்தனர். ஆனால் அதற்குள் 2 சிறுவர்களும் பலியானதால், அவர்கள் 2 சிறுவர்களின் உடல்களை மீட்டனர்.

இதுகுறித்து கூடங்குளம் கடலோர காவல்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 சிறுவர்களின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News