செய்திகள்

சேதராப்பட்டு அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்- தந்தை, மகள் படுகாயம்

Published On 2018-10-27 13:50 GMT   |   Update On 2018-10-27 13:50 GMT
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தந்தை- மகள் படுகாயம் அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சேதராப்பட்டு:

வில்லியனூர் அருகே கூடப்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 55) விவசாயி.

இவர் தனது மகள் பிரசன்னா (18)வுடன் இன்று காலை மோட்டார் சைக்கிளில் துத்திப்பட்டு வழியாக சேதராப்பட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது துத்திப்பட்டில் உள்ள தனியார் பள்ளி அருகே வந்த போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. மேலும் அந்த கார் தாறுமாறாக ஓடி சாலை ஓரத்தில் உள்ள மின் கம்பத்தில் மோதி நின்றது.

இதில் தூக்கி வீசப்பட்ட தில் பரமசிவம் மற்றும் அவரது மகள் பிரசன்னா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News