பாகூர் அருகே மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதியதில் அரசு பஸ் கண்டக்டர் பலி
பாகூர்:
பாகூர் சிவன் கோவில் பின்புறம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பிரகாஷ் (வயது 26). இவர் புதுவை அரசு போக்குவரத்து கழகத்தில் பஸ் கண்டக்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை.
நேற்று இரவு பிரகாஷ் பரிக்கல்பட்டு பகுதிக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பாகூர்- பரிக்கல்பட்டு சாலையில் வந்த போது எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமு, ஏட்டு புவனேஷ் ஆகியோர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி அரசு பஸ் கண்டக்டர் பலியான சம்பவம் பாகூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.