செய்திகள்

குடும்ப தகராறில் கணவனை கத்தியால் குத்தி கொன்ற மனைவி

Published On 2018-10-15 11:20 GMT   |   Update On 2018-10-15 11:20 GMT
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே குடும்ப தகராறில் கணவனை கத்தியால் கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.
பேரணாம்பட்டு:

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த எம்.வி.குப்பத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 30), உமராபாத்தில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு ரேவதி (25) என்ற மனைவியும், 3 வயதில் நிஷா, 1½ வயதில் சுஜிதா ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

செந்தில்குமார் சில ஆண்டுகளுக்கு முன்பு மனநிலை பாதிக்கப்பட்டு வேலூரில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததாகவும், பின்னர் திருமணம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஒரு வாரகாலமாக செந்தில்குமார் மனநல பாதிப்பிற்கு சரிவர மருந்து, மாத்திரைகள் சாப்பிடாமல் இருந்து வந்துள்ளார்.

இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. நேற்று மதியம் செந்தில்குமார் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ரேவதியின் பாட்டி வீட்டிற்கு சென்று வேர்கடலை எடுத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தங்கள் வீட்டிற்கு திரும்பி வந்தனர்.

அப்போது மீண்டும் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் வழக்கமான குடும்ப தகராறு தான் என கருதினர்.

இதில் ஆத்திரம் அடைந்த ரேவதி செந்தில்குமாரை கத்தியால் குத்தினார். இதில் அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக கூறினார்.

குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு, பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்பாசாமி மற்றும் மேல்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ரேவதியை கைது செய்தனர். #tamilnews
Tags:    

Similar News