செய்திகள்

முத்துப்பேட்டை அருகே தி.மு.க. எம்.எல்.ஏ. கார் டிரைவர் குளத்தில் மூழ்கி பலி

Published On 2018-10-07 16:31 GMT   |   Update On 2018-10-07 16:31 GMT
முத்துப்பேட்டை அருகே தி.மு.க. எம்.எல்.ஏ.கார் டிரைவர் குளத்தில் மூழ்கி பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள பண்ணைபொதூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 35). இவருடைய மனைவி செந்தமிழ்செல்வி. இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. ஜீவானந்தம், திருத்துறைப்பூண்டி தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ. ஆடலரசனின் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் ஜீவானந்தம் நேற்று முன்தினம் அருகில் உள்ள குளத்தில் குளிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் குளத்திற்கு சென்று பார்த்தபோது கரையில் மோட்டார் சைக்கிள் மட்டும் நின்றது.

இதையடுத்து உறவினர்கள் குளத்தினை சுற்றி பார்த்தபோது ஜீவானந்தத்தின் உடல் தண்ணீரில் மிதந்தது. இதுபற்றி தகவல் அறிந்த எடையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து எடையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், ஜீவானந்தம் குளத்தில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி பலியானது தெரிய வந்துள்ளது. 
Tags:    

Similar News