செய்திகள்

சங்கரன்கோவில் மின்வாரிய ஊழியர்களை கிராம மக்கள் முற்றுகை

Published On 2018-10-05 11:42 GMT   |   Update On 2018-10-05 11:42 GMT
சங்கரன்கோவில் மின்வாரிய ஊழியர்களை கிராம மக்கள் முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே அமைந்துள்ளது நெடுங்குளம் கிராமம். இங்கு 300-க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வரும் இக்கிராமத்தில் விவசாயம் முக்கிய தொழிலாகும்.

இந்த கிராமத்தை பல ஆண்டுகளாக சங்கரன்கோவில் டவுன் மின்வாரியத்தில் இருந்து மின் இணைப்பு கொடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நெடுங்குளம் கிராமத்திற்கு கொடுக்கப்பட்டு வரும் மின் இணைப்பை, நடுவக்குறிச்சி கிராம மின்வாரிய தொகுப்பிற்கு மாற்ற முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுங்குளம் கிராம மக்கள் சங்கரன்கோவில் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் மையத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து இது தொடர்பாக சங்கரன்கோவில் மின்வாரிய செயற்பொறியாளர் ரமேஷிடம் மனு அளித்தனர். இந்நிலையில் மின்வாரிய ஊழியர்கள் நடுவக்குறிச்சி கிராம மின் தொகுப்பிற்கு மாற்றி அமைக்க முயற்சி செய்தனர். இதை கண்ட அப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சங்கரன்கோவில் டவுண் போலீசார் சென்று முற்றுகையிட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேச்சுவார்ததை நடத்தி உரிய முடிவு செய்யப்படும் என அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News