செய்திகள்

பெரியபாளையம் அருகே குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் பெண்கள் மறியல்

Published On 2018-09-26 06:27 GMT   |   Update On 2018-09-26 06:27 GMT
பெரியபாளையம் அருகே குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெரியபாளையம்:

பெரியபாளையத்தை அடுத்த ஆற்றுப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அரியப்பாக்கம் காலனியில் ஏராளமான குடும்பங்கள் உள்ளன. அவர்களுக்கு அப்பகுதியில் உள்ள மேல்நிலைத் தொட்டி மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றும் மின் மோட்டார் பழுதானது. இதுவரை அந்த மின் மோட்டார் பழுது பார்க்கவில்லை என்று தெரிகிறது.

இதனால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக அப்பகுதி மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதி அடைந்தனர். சுமார் 2 கி.மீட்டர் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டது.

இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் ஊத்துக்கோட்டை- சென்னை நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த திடீர் மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News