செய்திகள்

தஞ்சையில் கள்ளக்காதலியை கடத்தி சென்ற முன்னாள் அமைச்சர் மகன்

Published On 2018-09-21 06:28 GMT   |   Update On 2018-09-21 06:28 GMT
முன்னாள் அமைச்சரின் மகன் கள்ளக்காதலியை கடத்தி சென்ற சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர்:

சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மகன் விஜய்ராஜேஷ் குமார் (வயது 35). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி யாழினி (30). இவர் தஞ்சை அண்ணா நகர் பர்மா காலனியை சேர்ந்தவர் ஆவார். இவர்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் யாழினி சென்னை தரமணியில் உள்ள சட்டக்கல்லூரியில் 3-ம் ஆண்டு சட்டம் படித்து வந்தார். அதே வகுப்பில் நாகை அக்கரைபேட்டையை சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் ஜெயபால் மகன் ரீத்தீஷ் (30) படித்து வந்தார்.

இந்த நிலையில் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதல் ஏற்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து நீடித்து வந்தது. இந்த கள்ளக்காதல் விவகாரம், யாழினியின் கணவருக்கு தெரியவந்தது. இதனால் அவர் கண்டித்து வந்தார். ஆனால் இதை கண்டுகொள்ளாமல் யாழினி ரித்தீசுடன் தொடர்ந்து தனிமையில் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த விஜய்ராஜேஷ் குமார், யாழினியை சட்டக் கல்லூரிக்கு செல்ல வேண்டாம் என்று தடுத்தார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் கணவரிடம் கோபித்து கொண்டு யாழினி, தாய் வீடான தஞ்சை பர்மா காலனிக்கு 2 குழந்தைகளுடன் வந்து விட்டார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த யாழினியை காணவில்லை. இதுபற்றி அவரது கணவர் விஜய்ராஜேஷ் குமார் தஞ்சை மகளிர் போலீசில் புகார் செய்தார்.

அதில, தனது மனைவி யாழினியை முன்னாள் அமைச்சர் ஜெயபால் மகன் ரீத்தீஷ் கடத்தி சென்று விட்டார். அவரை மீட்டு தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரீத்தீஷ், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் சுனில் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

முன்னாள் அமைச்சரின் மகன் கள்ளக்காதலியை கடத்தி சென்ற சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News