செய்திகள்

மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி

Published On 2018-09-16 22:18 IST   |   Update On 2018-09-16 22:18:00 IST
மடுகரையில் மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.

பாகூர்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே இளந்தம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (வயது 35). இவர் புதுவை மடுகரை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று மாலை பணி முடிந்ததும் அதே நிறுவனத்தில் பணிபுரியும் தனது நண்பர் வேணு (29) உள்ளிட்ட மற்றொருவருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார்.

மோட்டார் சைக்கிளை அரிகிருஷ்ணன் ஓட்டி சென்றார். மடுகரை- சொர்ணாவூர் ரோட்டில் சென்ற போது, எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்ற மின் கம்பம் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட அரிகிருஷ்ணன் படுகாயம் அடைந்தார். மற்ற 2 பேரும் லேசான காயம் அடைந்தனர்.

உடனடியாக அக்கம் பக்கத் தினர் அரிகிருஷ்ணனை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே அரிகிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News