செய்திகள்
திருச்சியில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது
திருச்சியில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி:
திருச்சி ஈ.பி. ரோடு பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (50). இவர் திருச்சி காந்திமார்க்கெட் அருகே நடந்து சென்றார். அப்போது அந்தவழியாக வந்த வாலிபர் பாலசுப்பிரமணியனை கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்றார்.
இது குறித்து அவர் காந்திமார்க்கெட் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வடக்கு தாராநல்லூர் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த சிவக்குமாரை (22) கைது செய்தனர்.
இதேபோல் ஸ்ரீரங்கம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மகன் மாரி (வயது 17). இவர் மீன் தொட்டி வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் மாரியை வழி மறித்து அவரிடம் இருந்து பணத்தை பறித்ததுடன், மீன் தொட்டியையும் உடைத்தனர்.
இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குபதிவு செய்து ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் ராம்குமார் (21) மற்றும் அதே பகுதியை சேர்ந்த சிறுவனையும் கைது செய்தனர்.