காரைக்குடியில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.16 1/2 லட்சம் மோசடி
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள நவரத்தினநகரைச் சேர்ந்தவர் பீட்டர் (வயது 68). இவரது மருமகளுக்கு அரசு ஊடகத்துறையில் எழுத்தர் வேலை வாங்கித்தருவதாக, அதே பகுதியில் உள்ள பாரி நகரைச் சேர்ந்த சண்முகநாதன் (54) என்பவர் ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதற்கு பணம் தேவை என்றும் கூறியுள்ளார்.
இதனை நம்பிய பீட்டர் பல்வேறு தவணைகளில் சண்முகநாதனுக்கு ரூ.6 லட்சம் கொடுத்ததாக தெரிகிறது.
இதே போல் காரைக்குடியைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவரின் மகனுக்கும் கால்நடைத்துறையில் உதவியாளர் வேலை வாங்கித்தருவதாக கூறி சண்முகநாதன் ரூ.3 லட்சம் பெற்றுள்ளார்.
2 பேரிடமும் ரூ.9 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு வேலையும் வாங்கித்தரவில்லை. பணத்தையும் திருப்பித்தர வில்லை.
சண்முகநாதன் இதே போல் கார் வாங்கி 2-வது நபருக்கு விற்பனை செய்து பல லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து பீட்டர் காரைக்குடி குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தேவகி வழக்குப்பதிவு செய்து சண்முகநாதனை கைது செய்தார்.
அரசு வேலை, கார் வாங்கி மோசடி என ரூ.16 1/2 லட்சம் வரை சண்முகநாதன் மோசடி செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.