செய்திகள்

மதகடிப்பட்டில் திருமண ஏக்கத்தில் ஓட்டல் தொழிலாளி தற்கொலை

Published On 2018-09-05 11:18 GMT   |   Update On 2018-09-05 11:18 GMT
மதகடிப்பட்டில் திருமண ஏக்கத்தில் ஓட்டல் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருபுவனை:

வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பழனி (வயது 28). இவர் கடந்த 3 ஆண்டுகளாக மதகடிப்பட்டில் முருகன் என்பவர் நடத்தி வரும் ஓட்டலில் தங்கி வேலை செய்து வந்தார்.

இவர் கடந்த சில மாதங்களாக தனக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கும்படி ஓட்டல் உரிமையாளரிடமும், ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களிடமும் வலியுறுத்தி வந்தார். ஆனால், யாரும் பழனிக்கு திருமணம் செய்து வைக்க முன்வரவில்லை. இதனால் பழனி குடிபழக்கத்துக்கு ஆளானார்.

நேற்று மாலை பழனி மது குடித்து விட்டு ஓட்டலுக்கு வந்தார். அப்போது ஓட்டல் உரிமையாளர் முருகனிடம் திருமணம் செய்து வைக்கும்படி மீண்டும் வலியுறுத்தினார்.

அதற்கு ஓட்டல் உரிமையாளர் முருகனுக்கு திருமணம் செய்து வைக்க மறுத்ததோடு இனிமேல் ஓட்டல் வேலைக்கு வரவேண்டாம் என்று கோபமாக கூறினார்.

இதனால் விரக்தியுடன் ஓட்டல் மாடிக்கு சென்ற பழனி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து தூக்குபோட்டு தொங்கினார். வெகு நேரமாக சாப்பிட வராததால் சந்தேகம் அடைந்த ஓட்டல் உரிமையாளர் முருகன் மற்றும் சக ஊழியர்கள் ஓட்டல் மாடிக்கு சென்று பார்த்தனர். அப்போது பழனி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பழனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News