செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே விவசாயியை குடிபோதையில் வெட்டிய கும்பல்

Published On 2018-08-29 10:09 GMT   |   Update On 2018-08-29 10:09 GMT
ஆண்டிப்பட்டி அருகே விவசாயியை குடிபோதையில் வெட்டிய கும்பல் கைது செய்யப்பட்டனர்.

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகே தர்மராஜபுரம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் செல்வம். கால்நடைகளுக்கு தீவணம் பறிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்புறமாக மற்றொரு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர்.

குடிபோதையில் இருந்த அவர்கள் பைக்கை தாறு மாறாக ஓட்டி செல்வத்தின் மீது மோதி உள்ளனர். இதனை அவர் தட்டி கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் செல்வத்தை சரமாரியாக தாக்கியது. பின்பு மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வெட்டினர். இதில் செல்வம் படுகாயம் அடைந்தார்.

இது குறித்து கடமலைக்குண்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 வாலிபர்களையும் பிடித்து விசாரித்ததில் அவர்கள் பாலகோம்பையை சேர்ந்த கவி, சரவணன் மற்றும் கோம்பையை சேர்ந்த கருப்பசாமி என தெரிய வந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News