செய்திகள்

சிதம்பரம் அருகே டாஸ்மாக் ஊழியரை அரிவாளால் வெட்டி ரூ.1¼ லட்சம் கொள்ளை

Published On 2018-08-29 12:15 IST   |   Update On 2018-08-29 12:15:00 IST
டாஸ்மாக் கடை ஊழியரை அரிவாளால் வெட்டி மர்ம மனிதர்கள் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள உசுப்பூர் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி (வயது 54). கிள்ளையில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.

இவர் டாஸ்மாக் கடையில் மது விற்பனையான பணத்தை தினமும் இரவு வீட்டுக்கு கொண்டு சென்று மறுநாள் காலையில் வங்கியில் செலுத்துவது வழக்கம். அதன்படி நேற்று இரவு 10 மணி அளவில் வியாபாரம் முடிந்ததும் டாஸ்மாக்கடையை பூட்டி விட்டு மது விற்பனையான ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை ஒரு பையில் வைத்துக் கொண்டு முத்துக்குமாரசாமி மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.

சிறிதுதூரம் மோட்டார் சைக்கிளில் சென்றபோது பின்னால் 2 மர்ம மனிதர்கள் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள் திடீரென்று முத்துக் குமாரசாமியின் மோட்டார் சைக்கிள் மீது மோதினர். இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

அப்போது அந்த மர்ம மனிதர்கள் முத்துக்குமாரசாமி வைத்திருந்த பணப்பையை பறிக்க முயன்றனர். ஆனால் அவர் பையை கொடுக்காமல் பிடித்துக்கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம மனிதர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் முத்துக்குமாரசாமியின் இடது கையில் வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்ததால் அவர் அலறினார்.

இதையடுத்து 2 பேரும் முத்துக்குமாரசாமி வைத்திருந்த பணப்பையை பறித்துக்கொண்டனர். மேலும் முத்துக்குமாரசாமி ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளையும் எடுத்து சென்றுவிட்டனர்.

அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த முத்துக்குமாரசாமி நடுரோட்டில் மயங்கி கிடந்தார். அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக கிள்ளை போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா வழக்குப்பதிவு செய்தார். டாஸ்மாக் கடை ஊழியரை வெட்டி பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News