செய்திகள்

புதுவை கடலில் வாஜ்பாய் அஸ்தி கரைப்பு

Published On 2018-08-25 10:22 GMT   |   Update On 2018-08-25 10:22 GMT
புதுவை முழுவதும் 2 நாட்களாக அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வைக்கப்பட்ட அஸ்திக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து வாஜ்பாய் அஸ்தி புதுவை கடலில் கரைக்கப்பட்டது.
புதுச்சேரி:

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16-ந் தேதி டெல்லியில் மரணமடைந்தார்.

டெல்லி யமுனை ஆற்றங்கரையில் அவர் உடல் தகனம் செய்யப்பட்டது. இதையடுத்து அவரின் அஸ்தி நாடு முழுவதும் உள்ள புனித ஆறுகள், கடலில் கரைக்கப்படுகிறது.

இதற்காக நாடு முழுவதும் அவரின் அஸ்தியை பா.ஜனதாவினர் கொண்டுசென்றுள்ளனர். புதுவைக்கு நேற்று முன் தினம் வாஜ்பாய் அஸ்தி வந்தது.

புதுவை முழுவதும் 2 நாட்களாக சுற்றிவந்த அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வைக்கப்பட்ட அஸ்திக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இன்று எல்லை பிள்ளை சாவடியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் அஞ்சலிக்காக அஸ்தி வைக்கப்பட்டிருந்தது. காலை 7 மணி முதல் 9 மணிவரை அஸ்திக்கு கட்சி நிர்வாகிகள் மலரஞ்சலி செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அஸ்தி ஊர்வலமாக கடற்கரை சாலைக்கு எடுத்து வரப்பட்டது. காந்தி திடலில் புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு கவர்னர் கிரண்பேடி தலைமை தாங்கினார். பா.ஜனதா தலைவர் சாமிநாதன் இரங்கல் தீர்மானம் வாசித்தார். பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சங்கர், செல்வகணபதி, துணை தலைவர்கள் ஏம்பலம் செல்வம், செல்வம், பொதுச்செயலாளர்கள் தங்க.விக்ரமன், ரவிச்சந்திரன், இளைஞரணி மவுலிதேவன் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து வேத பாராயணம் இசைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித்தலைவர் ரங்கசாமி, எம்.பி.க்.கள் கோகுலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.பி.க்கள் கண்ணன், ராமதாஸ், முன்னாள் அமைச்சர்கள் விஸ்வநாதன், ராஜவேலு, பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஓம்சக்திசேகர், கிருஷ்ணமூர்த்தி, நாரா.கலைநாதன்,

அ.தி.மு.க. மாநில செயலாளர் புருஷோத்தமன், தி.மு.க. அமைப்பாளர்கள் எஸ்.பி.சிவக்குமார், சிவா எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், விடுதலை சிறுத்தைகள் முதன்மை செயலாளர் தேவபொழிலன், ம.தி.மு.க. அமைப்பாளர் கபிரியேல், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் சஞ்சீவி, இந்து முன்னணி மாநில தலைவர் சனில்குமார், வி.எச்.பி. ஞானகுரு, வர்த்தக சபை செண்பகராஜன், குணசேகரன், வணிகர் கூட்டமைப்பு சிவசங்கரன், பாலு ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து வாஜ்பாய் அஸ்தி புதுவை கடலில் கரைக்கப்பட்டது.


Tags:    

Similar News