செய்திகள்

கோவையில் வெவ்வேறு விபத்தில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி

Published On 2018-08-23 11:37 GMT   |   Update On 2018-08-23 11:37 GMT
கோவை மாவட்டத்தில் வெவ்வேறு இடத்தில் நடந்த விபத்தில் தொழிலாளி உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோவை:

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள மண்டையூரை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மகன் மோகன் தாஸ் (வயது 22). கூலித் தொழிலாளி.

சம்பவத்தன்று இவர் கோவை- பொள்ளாச்சி ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த மோகன்தாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து செட்டிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மோகன்தாசின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோட்டை சேர்ந்தவர் ஹாரூன் ரசீது (வயது 45). ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று இவர் தனது ஆட்டோவில் மேட்டுப்பாளையம்- சிறுமுகை ரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் ஆட்டோ மீது மோதியது. இதில் ஹாரூன் ரசீது பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஹாரூன் ரசீது பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News