கோபி அருகே தனியார் இடத்தில் குடிசை போட்ட 35 பேர் அதிரடி கைது
கோபி:
கோபி அருகே உள்ள மேவாணியில் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பலர் பாதிக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட மேவாணி கணேசபுரம் பகுதியை சேர்ந்த 35 பேர் அங்குள்ள அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். இதில் 27 பெண்கள், 8 ஆண்கள் ஆவார்கள்.
இந்த நிலையில் வெள்ளம் வடிந்த பிறகு அவர்கள் 35 பேரும் தாங்கள் வசித்த பகுதிக்கு போகாமல் அந்த பகுதியில் உள்ள நஞ்சப்பன் மற்றும் சிலரது இடங்களில் கேட்காமல் குடிசைகள் அமைத்து தங்கினார் களாம்.
இதையொட்டி விவசாயி நஞ்சப்பன் கோபி போலீசில் புகார் செய்தார். கோபி தாசில்தார் வெங்கடேஸ்வரன், துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.
தொடர்ந்து தனியார் இடத்தில் குடிசைகள் போட்டு தங்கிய 35 பேரையும் கோபி போலீசார் கைது செய்தனர். அவர்கள் அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.