செய்திகள்

வடசென்னை அனல்மின் நிலையம் முன்பு ஒப்பந்ததாரர் வெட்டிக் கொலை

Published On 2018-08-13 09:09 GMT   |   Update On 2018-08-13 09:09 GMT
வடசென்னை அனல்மின் நிலையம் முன்பு ஒப்பந்ததாரர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Murder

பொன்னேரி:

எண்ணூர் பர்மா நகரைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் (38). இவர் அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை பணிக்கு அனுப்பும் ஒப்பந்தரராக உள்ளார்.

இன்று காலை அவர் நண்பர்கள் 3 பேருடன் காரில் வடசென்னை அனல்மின் நிலையத்துக்கு வந்தார். பின்னர் அவர்கள் 2-வது நிலையில் இருந்து வெளியே வந்தனர். அப்போது எதிரே வேகமாக வந்த மற்றொரு கார் ஜேம்ஸ் வந்த காரை மறித்தப்படி நின்றது.

அதிர்ச்சி அடைந்த ஜேம்சும், உடன் இருந்த நண்பர்களும் வெளியே இறங்க முயன்றனர். இதற்குள் காரில் இருந்து இறங்கிய முகமூடி அணிந்த 7 பேர் கும்பல் அவர்களை சுற்றி வளைத்தனர்.

ஜேம்சை மட்டும் குறி வைத்து அவர்கள் சரமாரியாக வெட்டினர். காரில் இருந்து அவரை வெளியே இழுத்து தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த ஜேம்ஸ் காருக்குள்ளேயே பரிதாபமாக இறந்தார்.

இதை பார்த்த அவரது நண்பர்கள் காரில் இருந்து இறங்கி தப்பி ஓட்டம் பிடித்தனர். உடனே கொலை கும்பல் தாங்கள் வந்த காரில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

மிகவும் பரபரப்பாக காணப்படும் வடசென்னை அனல்மின் நிலைய நுழைவு பகுதியில் நடந்த இந்த கொலையால் அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. ஊழியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

தகவல் அறிந்ததும் மீஞ்சூர் போலீசார் விரைந்து வந்து ஜேம்சின் உடலை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ் பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஜேம்சுக்கும், வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஒப்பந்ததாரராக உள்ள மற்றொருவருக்கும் இடையே தகராறு உள்ளது. இந்த மோதலில் கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News