குத்தாலம் அருகே ஆக்கிரமிப்பை அகற்றி குளத்தில் நீர் நிரப்பக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
குத்தாலம்:
நாகை மாவட்டம் குத்தாலம் அருகே கடலங்குடியில் உள்ள புதுக்குளத்துக்கு செல்லும் நீர்வழிப்பாதையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதாகவும், உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றி குளத்தில் நீர் நிரப்பக்கோரியும் கிராமமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலங்குடி புதுக் குளத்துக்கு செல்லும் நீர்வழிப்பாதையான புதுக்குளம் வாய்க்காலில் சிலர் கற்களைக் கொண்டு தடை ஏற்படுத்தி, தண்ணீர் செல்லமுடியாத நிலையை ஏற்படுத்தி இருந்தனர். இதனால் தற்போது காவிரி ஆற்றில் செல்லும் நீர் புதுக்குளத்துக்கு செல்ல முடியாமல் தடைபட்டது. இந்த ஆக்கிரமிப்பை அகற்றி, புதுக்குளத்துக்கு தண்ணீர் நிரப்ப வலியுறுத்தி பெண்கள் உட்பட அப்பகுதி மக்கள் 50 பேர் கடலங்குடி மெயின்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த குத்தாலம் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் வந்து கூட்டத்தை கலைத்தனர். தாசில்தார் சபீதாதேவி மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியல் போராட்டத்தால் பூம்புகார்-கல்லணை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. #waterissue